மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்
சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம் செலுத்தியுள்ளதோடு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், கூறியுள்ளதாவது:
‘'தமிழகத்தின் வீரம் மீண்டும் ஒரு முறை இமயமலைச் சாரலில் தன் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் விதத்தில், சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்துத் துணிவுடன் போரிட்டபொழுது கொல்லப்பட்டிருக்கிறார்.

அவருடைய உயிர்த்தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துகின்ற அதே நேரத்தில், அந்த வீரப்புதல்வரை நாட்டிற்குத் தந்த அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னதப் போராட்டத்தில் அந்த இளைஞர் முகுந்த் வரதராஜன், ஏற்கனவே ஐ.நா. அமைதிப் படையின் சார்பில் லெபனான் நாட்டில் பணிபுரிந்தவர் என்ற தகவல் ஒவ்வொரு தமிழரும், இந்தியரும் பெருமைப்படும் செய்தியாகும்.
சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்கள், நாட்டு நலனுக்காக உயிர் நீத்த தியாகிகள் ஆகியோரின் வீரத்தைப் போற்றி அவர்களுக்குரிய மரியாதையை செலுத்துவதும், அவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதும் திமுகவின் வழக்கம். ஆட்சிப்பொறுப்பில் இல்லாவிட்டாலும் திமுக இது போன்று தியாகம் செய்யும் வீரகளுக்காக தன் கடமையை நிறைவேற்ற எப்போதுமே தவறியதில்லை.
அந்த வழியில், காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தி, அவர்தம் பெற்றோருக்கும், துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தியாகத்திற்குக் கிடைக்க வேண்டிய அரசு மரியாதைகள் அனைத்தும் கிடைக்க திமுக என்றும் துணை நிற்கும்''என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications