முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு நடைபயணம்... ஸ்டாலின் அறிவிப்பு!
ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்புக்கான நடைபயணம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்புக்கான நடைபயணம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்துக்கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்தில் எந்த வகையில் பங்கேற்கலாம் என்பதை நாளை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் முழுஅடைப்பை நடத்துவது என முடிவு செய்து அந்த முழுஅடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவிலே நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படி ஒரு முழு அடைப்பை பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவில் 100க்கு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. முழுஅடைப்பிற்கு ஒத்துழைப்பு தந்துள்ள பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும், மாணவர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அமைப்புகள் என போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நான் எனது நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
இன்று மாலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடப்பதாக இருந்தது. இன்று அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்று வரும் மறியல் போராட்டத்தால் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும் பொதுஇடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று நடப்பதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.
ஏப்ரல் 7ல் நடைபயணம்
ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்தபடி காவிரி உரிமை மீட்புப் பயணம் டெல்டா மாவட்டத்தில் தொடங்குவதாக முடிவு செய்தோம். இதன்படி ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்குகிறோம். இந்த நடைபயணமானது திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடிவடைய திட்டமிட்டுள்ளோம்.
அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
இந்த நடைபயணத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எந்த நிலையில் பங்கேற்பது எந்தெந்த வகையில் அவர்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நாளை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.