நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வரவராவிட்டால்... மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்- மு.க. ஸ்டாலின்
நீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திண்டுக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலர் க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பெரியார் விருது என்.கிருஷ்ணமூர்த்திக்கும், அண்ணா விருது பெ.சு.திருவேங்கடத்துக்கும் இதேபோல் பாரிவேந்தர் விருது அ.அம்பலவாணனுக்கும், கலைஞர் விருதை சங்கரி நாராயணனுக்கும் வழங்கி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சசிகலா போட்ட பிச்சை
இந்த விழாவில் முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசிய போது சசிகலா போட்ட பிச்சையில் எடப்பாடி முதல்வர் ஆனார். இப்ப நடக்கக் கூடிய அரசு மெஜாரிட்டி இல்லாத அரசு. மோடியின் அருளால்தான் முதல்வர் பதவியில் எடப்பாடி இருக்கிறார்.
ஜெ. மறைந்ததால்...
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக திமுக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. ஜெ. மறைந்ததால் குதிரை பேரம் நடந்து எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது என்றார் துரைமுருகன். இதைத் தொடர்ந்து பேசிய திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வடநாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகத்தை காக்க போகிறவர் மு.க.ஸ்டாலின் என்றார்.
மு.க. ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில் திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த கூட்டம் சரியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டுவந்து தமிழை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. மேலும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.
மத்திய அரசிடம் அடமானம்
அதிமுக அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது. பெரும்பான்மை இல்லாத அரசு செயல்பட ஆளுநர் எப்படி அனுமதி அளிக்கிறார்?. நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களை மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது. அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நொடியும் நமது உரிமையை இழந்து வருகிறோம்.
ஆளும்கட்சிதான்
முப்பெரும் விழா கட்சி மாநாடாக நடைபெற்று வருகிறது. 68 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் இயக்கம்தான் திமுக. இன்று திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக தான் இருந்து வருகிறது.
மக்கள் எதிர்பார்ப்பு
எப்பொழுது திமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு எப்போது திமுக ஆட்சிக்கு வரும் என்பதுதான். மைனாரிட்டி அதிமுக அரசை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் மக்கள் விரும்பாத இந்த எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார் மு.க. ஸ்டாலின்.