தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல.. பொதுத் தேர்தல் தான் வரும்.. ஸ்டாலின் பேச்சு!
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற்றிருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும் இனி தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் தான் வரப்போகிறது என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓர் எளிய தொண்டரை வேட்பாளராக நிறுத்தி தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டோம். ஆனால், ஆளுங்கட்சியினர் ரூ.89 கோடி பணப்பட்டுவாட செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. பணப் பட்டுவாடா செய்தது உறுதியானதை காரணம்காட்டி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
தினகரன் ரூ.2000 கோடி செலவு செய்திருந்தாலும் தி.மு.க.வே நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல பொதுத்தேர்தல் வரத்தான் போகிறது.
மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.