வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருவாரூர்: தமிழக அரசின் அலட்சிய போக்கே அதிக வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும், நடப்பு சம்பா பயிர்கள் ஒரு லட்சம் ஏக்கர் அளவில் தண்ணீரில் மூழ்கியும், 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். திருவாரூர் அருகே தாழைகுடியில் பயிர் சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களில், சென்னை மாநகர பேருந்துகளில் ஜெயலலிதா படம் ஒட்டியுள்ளது கண்டனத்துக்குறியது. இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என எச்சரித்தும் அதிமுக அரசு அலட்சியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே பேரிழிப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
வெள்ள நிவாரணப்பனிகள் முறையாக செயல்படுத்தபடவில்லை. மேலும், சுகாதார சீர்கேடுகளால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் தாக்கத்தினால் பல உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் எந்தவித பாதிப்பும் இல்லை என பொய்யான தகவல்களை பத்திரிக்கை, ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஒரு ஹெக்டருக்கு நிவாரணமாக ரூபாய் 13 ஆயிரத்தி 500 வழங்குவதாக அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகையால் ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.