மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு...என்ன செய்யப் போகிறது தமிழக அரசு: ஸ்டாலின் கேள்வி
வாக்குறுதியை நிறைவேற்றாத பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியது வரவேற்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
ஈரோடு : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியின் செயலை கண்டித்து பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக வந்தேன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இது மண்டல மாநாடாக இருந்தாலும் மாநில மாநாடை மிஞ்சப் போகும் அளவிற்கு நடக்க இருக்கிறது.
100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. 100 அடி அகலத்தில் மாநாட்டு மேடை சிறப்பான வகையில் போடப்பட்டு வருகிறது. ஒன்றரை லட்சம் மக்கள் அமர்ந்து மாநாட்டை போடக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் நீதிக்கட்சிகள், திராவிடக் கட்சிகள் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறையினர், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆதரவை திரும்பப் பெற்ற சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு பிரதமராக இருக்கும்போது மோடி எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதால் தான் அவருடைய கட்சியை சார்ந்த 2 மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார். ராஜினாமா செய்ததோடு நிற்காமல் பாஜகவுக்கு தந்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளனர்.
திருந்துமா தமிழக அரசு?
காவிரிப் பிரச்னையில் விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. நீட் பிரச்னையில் எவ்வளவு மோசமாக தட்டிக்கழித்துள்ளது மத்திய அரசு. அதையெல்லாம் தட்டிக்கேட்டிருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவின் செயலைப் பார்த்தாவது தமிழக ஆட்சியாளர்கள் திருந்துவார்களா? என்பது தான் என்னுடைய கேள்வி.
நிறைவேற்ற வேண்டும்
சேதுசமுத்திர திட்டத்தை ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்றினால் வரவேற்கத்தக்கது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அண்ணா, கருணாநிதியின் கனவு. இது இந்தியாவிற்கே பலனளிக்கும் ஒரு திட்டம், இப்படிப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
திமுக ராஜினாமாவுக்குத் தயார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வோம் என்று சொன்னது மக்களின் வரவேற்புக்காக அல்ல, விவசாயிகளின் கண்ணீர்துடைக்க. எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று தான் எதிர்பார்க்கிறோம். அதை ஏற்று தமிழக அரசு முன் வந்தால் திமுகவும் அறிவித்ததை நிறைவேற்றத் தயாராக இருக்கிறது.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம்
ஜெயலலிதா இருந்த போதே அத்திக்கடவு- அவிநாசி திட்டங்களுக்காக பல 110 விதிகளை அறிவித்துள்ளார். ஆனால் எதுவும் நடக்கவில்லை, இப்போது அறிவித்துள்ளதையாவது அரசு செய்யுமா என்பதை பார்க்கலாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.