எதிர்க்கட்சித் தலைவர் நேர்முக உதவியாளரை நீக்கியது செல்லாது.. ஐகோர்ட் தீர்ப்பு.. ஸ்டாலின் வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரை நீக்கியது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் உத்தவிட்டுள்ளதை ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ஆதிசேசனை நீக்கியது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் சட்டப்பேரவையின் மாண்பு காப்பாற்றப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் நேர்முக உதவியாளர் நியமிப்பது சட்டமன்றப் பணியாளர் விதிகளுக்கு உட்பட்ட செயல்பாடாகும். அந்த அடிப்படையில், என் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட அரசு நேர்முக உதவியாளர் ஆதிசேசனை எனக்கு தகவல் சொல்லாமலேயே ஒரு தலைப்பட்சமாக நீக்கினார் சட்டப் பேரவை செயலாளர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு நியமிக்கப்பட்ட நேர்முக உதவியாளரை நீக்கி உத்தரவு பிறப்பித்தது செல்லாது என்று நான் பேரவைத் தலைவரிடம் புகார் செய்தேன். இதுகுறித்து பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், "சட்டமன்ற பணியாளர் விதிகளுக்கு முற்றிலும் முரணாக போடப்பட்ட இந்த அரசாணையை" செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
வழக்கினை விசாரித்து, சட்டப்பேரவை செயலாளரின் அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஆதிசேசனை நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சட்டரீதியான செயல்பாடுகளில் கூட அரசியல் காழ்ப்புணர்வுடன் அரசு அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் செயல்படுவதும், அதற்கு கட்சி நிர்வாகி போல பேரவைத் தலைவர் துணை போவதும் நல்ல சட்டமன்ற மரபு அல்ல.
இனியாவது இது போன்ற செயல்களில் ஈடுபடாமல், ஜனநாயக மரபுகளைக் காக்கும் ஆரோக்கியமான அரசியல் நாகரிகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேரவைத் தலைவர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சட்டமன்ற மரபுகளை நீதிமன்றத்தின் மூலம் மீட்க வேண்டிய சூழலை தமிழகத்தை ஆள்வோர் இனியும் உருவாக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.