ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதிமுக ஆதரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் மதிமுக முடிவை வரவேற்கிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு என்ற முடிவை நான் வரவேற்கிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன் அணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேமுதிக, பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. இந்நிலையில் மதிமுகவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. மதிமுகவின் தலைமை கழகமான தாயகத்தில் இன்று பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு அளிப்பது என்று வைகோ அறிவித்தார். இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுகவுக்கு ஆதரவு என்ற மதிமுகவின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
மாநில உரிமைகளை மத்திய அடரிடம் அடகு வைக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பிறகு யோசிப்போம் என்றார் மு.க.ஸ்டாலின்.