ஆஹா.. மதுசூதனனுக்கு சிக்கல் போலயே.. கோகுல இந்திரா, ஆதி ராஜாராமும் களத்தில் குதிக்கிறார்கள்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மதுசூதனன்,ள்பட 3 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு தருமாறு அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட 3 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டதை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. இதையடுத்து ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
கடந்த முறை போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையே ஒரு சில கட்சிகள் நிறுத்துவதாலும் மதுசூதனன் அவை தலைவர் என்பதாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக நேற்று கட்சி அலுவலகத்தில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூடியது. எனினும் சில சலசலப்புகள் எழுந்ததால் வேட்பாளர் தேர்வு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுசூதனன் விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தென்சென்னை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோரும் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் உதவியாளரும் விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. நாளை அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்யவுள்ள நிலையில் மதுசூதனன் உள்பட 3 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.