ராமதாஸ் பேத்தி கல்யாணத்திற்கு நிபந்தனை விதிக்கச் சொன்னவருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் கடந்த 2013ம் ஆண்டு நடத்திய சித்திரை முழு நிலவு நிகழ்ச்சியின்போது கலவரம் வெடித்தது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு நான் மனு கொடுத்தேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தேன். இதற்கிடையில், சித்திரை முழு நிலவு நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததை தொடர்ந்து, என்னுடைய வழக்கை உயர்நீதிமன்றம் பைசல் செய்தது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேத்தி திருமணம் மாமல்லபுரம் அருகே 30-ந்தேதி நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியை வன்னியர் பலத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியாக நடத்தி, வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி பேரம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இந்த திருமணம் நடைபெறும் இடத்துக்கு அருகே வன்னியரும், தலித் மக்களும் அதிகம் வசிக்கின்றனர். எனவே, இந்த திருமண நிகழ்ச்சியை நடத்த கடும் நிபந்தனை விதிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுவை பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விடவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கடுமையான கண்டனத்தை மனுதாரரிடம் தெரிவித்தனர். மேலும் இது விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி விட்டனர். இதையடுத்து வாராகி தனது மனுவை திரும்பப் பெறுவதாக கூறினார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.