பாமகவின் 'சட்டவிரோத' பிரசாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் அதற்குள்ளாகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாமக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அது தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பாலாஜி தொடர்ந்துள்ளார். பொது நலன் மனுவாக இதை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பாமகவின் பிரசாரப் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தனது மனுவில் பாலாஜி கூறியிருப்பதாவது:
7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணகிரி, அரக்கோணம், உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கடந்த 2013 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே அறிவித்து விட்டார்.
தீவிரப் பிரசாரம்
இதையடுத்து அந்த வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இதனால், சாதி மோதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது.
நடத்தை விதி மீறல்
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற பா.ம.க., தேர்தல் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்ட கட்சியாகும். இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட கையேட்டின்படி, வேட்புமனு வாபஸ் பெறும் நாளில் இருந்து 13 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ்- ஜி.கே.,மணி
எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உட்பட 7 வேட்பாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தேர்தல் கமிஷனுக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் கடந்த 10-12-2013 அன்று மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்
எனவே என் மனு குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், மனுவை விசாரணைக்கு ஏற்று, பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல்ஆணையம், தமிழக டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.