அலங்காநல்லூரில் போலீஸ் தடியடி… பிப். 15க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய தடியடி வன்முறை குறித்து பிப்ரவரி 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: அலங்காநல்லூர் மற்றும் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அலங்காநல்லூர் மற்றும் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.கனகவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம், செல்லூர் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்ததையடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு போராட்டக்காரர்கள் கால அவகாசம் கேட்டனர். அதற்கு அனுமதி மறுத்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மதுரையில் போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலரும் காயமடைந்தனர். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிலரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் காவல் நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து தாக்கி வருகின்றனர்.
எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மதுரை மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற போலீஸ் தடியடி குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், போலீசாரின் அத்துமீறல் தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி விரிவான அறிக்கையை, பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.