"அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படு சூடான விவாதம் நடந்தது. விவாதத்தை நடத்தியவர்கள் வக்கீல்கள் அல்ல.. மாறாக நீதிபதிகள். சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான படு சூடாக, கோபமாக தங்களது கருத்துக்களை இன்று வைத்தனர்.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் சரமாரியாக அரசுத் தரப்புக்கு கேள்விகளை விடுத்தனர்.
அதில் ஒரு கேள்விதான் இது..
அடிடா அவளை வெட்ரா அவளை என்றெல்லாம் பாட்டுக்கள் சினிமாவில் வருகின்றன. அதை விட மோசமாகவும் வருகின்றன. இதையெல்லாம் இந்த அரசு தடுத்துள்ளது..? தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதா? அதுதொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன?
பெண்களை மோசமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலுமான இது போன்ற பாடல்களை ஏன் அரசு அனுமதிக்கிறது என்று நீதிபதிகள் காட்டமாக கேட்டனர்.
நீதிபதிகள் கோபமாக சுட்டிக் காட்டிய இந்தப் பாடல் மயக்கம் என்ன என்ற படத்தில் வரும் பாடலாகும். செல்வராகவன் இயக்கிய படம் இது. அவரது தம்பி தனுஷ்தான் இதில் ஹீரோ. புகைப்படக் கலைஞராக இதில் வந்திருப்பார். இசை ஜி.வி.பிரகாஷ்.