"மகாராஜ்" திடீரென இறந்தது எப்படி... காரணத்தைக் கண்டுபிடிக்க கொங்கு நாடு ஜனநாயக கட்சி வலியுறுத்தல்!
சென்னை: கோவை அருகே மதுக்கரையில் பிடிக்கப்பட்ட காட்டுயானை என்ன காரணத்தால் உயிரிழந்துள்ளது என்பதை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து, யானையின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுக்கரை பகுதியில் ஊருக்குள் சுற்றித் திரிந்த யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு யானைகள் முகாமுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அந்த யானை உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதாலேயே யானை உயிரிழந்தது என வனவிலங்கு ஆர்வலர்ககள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மதுக்கரை வனத்துறையினரால் மயக்கஊசி செலுத்தப்பட்ட காட்டுயானை, டாப் சிலிப்பில் உள்ள வரக்களியாறு முகாமில் நேற்று உயிரிழந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மாங்கரைப் பகுதியில் மயக்கமருந்து செலுத்தப்பட்ட யானை பள்ளத்தில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நஞ்சன் என்ற யானை போதிய மருத்துவ சிகிச்சையின்றி உயிரிழந்தது.
அதேபோல போதிய அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் பற்றாக்குறையால் மனிதர்களை தாக்கும் புலி,கரடி போன்றவை சுட்டுக்கொல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
அது மட்டுமின்றி வேலிகள், ரயில் தண்டவாளங்கள்,கிணறுகள் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவற்றால் விலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகள் உயிரிழப்பு போர்க்கால அடிப்படையில் தடுக்கப்பட வேண்டும்.
தற்போது உயிரிழந்துள்ள காட்டுயானை என்ன காரணத்தால் உயிரிழந்துள்ளது என்பதை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து, யானையின் உடலை பரிசோதனை செய்து, உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு நாகராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications