சைக்கிள், லேப்டாப் தந்த ‘அம்மா’வுக்கு ஜெயிலா... சோகத்தில் தீக்குளித்த பிளஸ் 2 மாணவி
மதுரை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப் பட்டதால் மனமுடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து எப்படியும் விடுதலை ஆகி விடுவார் ஜெயலலிதா என ஏகத்துக்கும் நம்பிக்கையில் இருந்த அதிமுகவினருக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது.
ஊடகங்கள் வாயிலாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை விபரத்தை அறிந்த சில அதிமுக தொண்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். மேலும் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தவகையில், மதுரை எழுமலை அருகே நாராயணபுரத்தில் வசித்து வரும் நாகலெட்சுமி (17).என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தார் மீட்டு அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தற்போது 80% தீக்காயங்களுடன் அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையைத் தாங்க முடியாமல் நாகலெட்சுமி தீக்குளித்ததாக அவரது குடும்பத்தார் போலீசில் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி திட்டத்தினால் பயனடைந்தவர் நாகலட்சுமி என்றும், எனவே இந்தத் தீர்ப்பினால் அவர் மனம் உடைந்து இத்தகைய தவறான முடிவை எடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கோபால்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications