எய்ம்ஸை யார் கொண்டு வந்தா என்ன.. மதுரைக்கு மகிழ்ச்சிதான்... செல்லூர் ராஜுக்கும்தான்!
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசுதான் காரணம் என செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு முழுக்க முழுக்க காரணம் மத்திய பாஜகதான் என்று தமிழிசை சவுந்தராஜன் நேற்றைய தினம் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது பற்றி பிற கட்சிகள் 1% கூட உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழிசை அப்போது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, விளாச்சேரியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் 148-வது விழா பங்கேற்க வந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், ஊர் கூடி தேர் இழுத்ததால்தான் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளதாகவும், இதனை யார் கொண்டு வந்தாலும், அதனை மதுரைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சிதான் என்றார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுவதால், எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதில் எந்த தவறுமில்லை என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு அதற்காக பிரதமர் மோடிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பா.ஜ.க. மட்டுமே இதனை கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் என்றும், இதில் தமிழக முதல்வருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு என்றார்.












Click it and Unblock the Notifications