தேர்தல் அலுவலர்களை “டெலிபோன் ஆபரேட்டர்கள்” ஆக்கி பழிவாங்கிய மதுரை மாநகராட்சி
மதுரை: மதுரை தொகுதிக்கான தேர்தல் மண்டல அலுவலர்களை "டெலிபோன் ஆபரேட்டராகளாக" நியமித்த மாநகராட்சி, ஓட்டுப்பதிவு அன்றும் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்துள்ள சம்பவம் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மாநகராட்சியில் உதவிப்பொறியாளர்கள் பணியிடம் காலியாக இருந்த போது, தொழில்நுட்ப உதவியாளர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்தனர். கடந்த ஆட்சியில் தொழில்நுட்ப உதவியாளர்களின் பார்வையில்தான் வார்டு பணி நடந்தது.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் உதவிப்பொறியாளர்கள் நியமனம் நடைபெற்றது. தொழில்நுட்ப உதவியாளர்கள் அவர்களுக்குரிய பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுவரை அனைவருக்கும் முகம் தெரிந்த அவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முடிவுக்கு வராத சோகம்:
அவர்களின் சோகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மதுரை தேர்தல் பணியில் மாநகராட்சியின் 16 தொழில்நுட்ப உதவியாளர்களை தேர்தல் மண்டல அலுவலர்களாக கலெக்டர் சுப்பிரமணியன் நியமித்தார்.
முக்கிய பணிகள்:
ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 15 முதல் 18 ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்படும். அதற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் விதிமீறல், புகார்களை கண்காணிப்பது, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள் அதற்கான இயந்திரங்களை சாவடியில் சேர்ப்பது, ஓட்டுப்பதிவுக்கு பின் இயந்திரங்களை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பது என அவர்களுக்கான பணி முக்கியமானது.
பழிவாங்கிய மாநகராட்சி:
உதவிப்பொறியாளர் பணி திரும்ப பெறப்பட்டதிலிருந்தே, பொறியாளர் பிரிவுக்கும், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் ஒரு விதமான மனத்தாங்கல் நடந்து கொண்டிருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் பணியில் இருக்கும் அவர்களை "டெலிபோன்" ஆப்பரேட்டர்களாக மாநகராட்சி நியமித்துள்ளது.
கடைசியில் "பிபிஓ" வேலை
குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார்களை பெற பொறியாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் குடிநீர் தொடர்பாக வரும் புகார்களை அவர்கள் பெறவேண்டும். நியமிக்கப்பட்டுள்ள 18 பேரில் 16 பேர் தேர்தல் பணிக்கான மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
கடும் அதிருப்தி:
கடந்த 40 நாட்களாக தேர்தல் பணியில் இருக்கும் அவர்களுக்கு கூடுதலாக இந்த பணியை ஒதுக்கியுள்ளதால் தொழில்நுட்ப உதவியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேர்தல் அன்றும் கொடுமை:
உச்சகட்டமாக, தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று மத்திய தொகுதிக்கான மண்டல அலுவலர்கள் மூன்று பேருக்கு அப்பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவமதித்த மாநகராட்சி:
இச்செயல் பற்றி தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் கூறும்போது, "எங்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை ஒதுக்கியுள்ளனர். பழிவாங்கும் எண்ணத்தில் ஓட்டுப்பதிவு நாளை மறந்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்கு இடையூறு:
பொறியாளர் பிரிவில் 3 உதவிப்பொறியாளர்கள் உட்பட 25 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு பணி வழங்காமல் எங்களை அவமதிப்பதாக நினைத்து தேர்தல் பணிக்கு இடையூறு செய்துள்ளனர். கமிஷனருக்கு தெரியாமலேயே இது நடந்துள்ளது "என்று கூறியுள்ளார்.