கிரானைட் கொள்ளை: நரபலி எலும்புக்கூடுகள் மேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
மதுரை: மதுரை மாவட்டம் பிஆர்பி கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக கண்டெடுக்கப்பட்ட 5 எலும்புக்கூடுகளை மேலூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டதை அடுத்து அவை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் மோசடி நடந்ததாக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, அவரையே சட்ட ஆணையராக நியமித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழவளவைச் சேர்ந்தவரும், பி.ஆர்.பி. நிறுவன முன்னாள் ஓட்டுநருமான சேவற்கொடியோன் சகாயத்திடம் அளித்த புகாரில், ‘மனநலம் பாதித்த இருவரை பி.ஆர்.பி. நிறுவனத்தினர் நரபலி கொடுத்து சடலங்களை இ.மலம் பட்டி குவாரி அருகே புதைத்துள்ளனர். அந்த இடத்தை அடை யாளம் காட்டத் தயார்' என்று கூறியிருந்தார்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ.மலம்பட்டி ஊராட்சி சின்னமலம்பட்டி குவாரி அருகே, சேவற்கொடியோன் சுட்டிக்காட்டிய இடமான பிஆர்பி குவாரிக்குள் 9 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் 4 எலும்புக் கூடுகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 எலும்புக் கூடுகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவற்றையும் ஆய்விற்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என கீழவளவு போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து 5 எலும்புக்கூடுகளையும் மேலூர் நீதிமன்றத்திற்கு புதன்கிழமை கொண்டு வர மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி நேற்று உத்தரவிட்டார். அதன்படி அந்த எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவை சென்னைக்கு மரபணு சோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications