கணவர், மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறாவிட்டாலும் அந்தத் திருமணம் செல்லாது....!
மதுரை: கலப்புத் திருமணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
இரு மதத்தினர் கலப்புத் திருமணம் செய்யும்போது இருவருமே ஏதாவது ஒரு மத்திற்கு மாற வேண்டும். அப்படி இல்லாமல் ஒருவர் மட்டும் மாறி, இன்னொருவர் மாறாவிட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று அந்தத் தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் சிவக்குமார், ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைத் தாக்கல் செய்திருந்தவர் ஒரு பெண்மணி. தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும் அந்தத் தாயார் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
திருமணம் செய்த அந்த கலப்புத் தம்பதிகளில் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பழனி முருகன் கோவிலில் வைத்து மணம் புரிந்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று அப்பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கிறிஸ்தவ ஆண் மதம் மாறாத பட்சத்தில் இந்து கோவிலில் நடைபெற்ற திருமணம் எப்படி முறைப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பினர்.
இருப்பினும் அந்த பெண் திருமணம் செய்து கொண்ட ஆணுடனே செல்வதாக பிடிவாதமாக கூறினார். இதையடுத்து சட்டப்படி இந்த திருமணம் செல்லாது என்ற போதிலும், பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் ஆட்கொணர்வு மனுவையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications