மனைவிக்கு மரியாதை…. திருப்பூரில் மனைவி நல வேட்பு நாள் விழா
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற 'மனைவி நல வேட்பு நாள் விழா'வில் இயக்குனர் ராஜகுமாரன்- நடிகை தேவயானி தம்பதியினர், பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தம்பதியர் பங்கேற்று தங்களது திருமணம் முடிந்ததில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர்.
திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அவினாசி செந்தூர் மகாலில் 'மனைவி நல
வேட்பு நாள் விழா' ஞாயிறன்று நடைபெற்றது. இதில் நடிகை தேவயானி- ராஜகுமாரன் தம்பதியினர் மற்றும் சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தம்பதிகள் பங்கேற்பு
மனைவி நல வேட்பு நாள் விழாவிற்கு உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் பி.கே.ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். உயிர் கலப்பு தவம் நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த தம்பதிகளுக்கு காப்பு கயிறு, ஆப்பிள், பூமாலை, ரோஜாப்பூ உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
மனைவிக்கு மரியாதை
முதலாவதாக தம்பதிகள் காப்பு கயிற்றை கட்டினர். பின்னர் மாலைகளை மாற்றிக் கொண்டனர். இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்ததில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர்.
காந்த பரிமாற்றம்
தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால், காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம்
தேவயானி – ராஜகுமாரன்
தேவயானியும் ராஜகுமாரனும் ஒருவருக்கொருவர் மாலைமாற்றிக்கொண்டனர். தொடர்ந்து தங்களின் திருமணத்தை அசைபோட்டதோடு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
தேவயானி
கணவன், மனைவி இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு மாறி மாறி கண்களை பாருங்கள். அன்பாக மனம் விட்டு பேசுங்கள் என்றார் நடிகை தேவயானி. கணவன்-மனைவி இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லுங்கள், அதுதான் உண்மையான வாழ்க்கை, உண்மையான அன்பு" என்றும் நடிகை தேவயானி கூறினார் .
மனைவிக்கு அன்பு
விழாவில் பேசிய சுகிசிவம் மனைவி கணவனுக்கு தாயின் இடத்தை நிரப்ப முடியும். ஆனால் தாயினால் மனைவியின் இடத்தை நிரப்ப முடியாது. என்னைப் பொறுத்தவரை தாயை விட மனைவியே
சிறந்தவள்.இந்த மனைவி நல வேட்பு விழாவில் அனைத்து கணவர்களும் இதை புரிந்து கொண்டு மனைவிகளை போற்றி அன்பு செய்ய வேண்டும் என்றார்