66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: பிறந்த நாளையொட்டி தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: 66 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் "மாபெரும் மரம் நடும்" திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
2012ல் 64 லட்சம்
அதன்படி, கடந்த 23.2.2012 அன்று ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்றினை நட்டு தமிழ்நாடு முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.
2013ல் 65 லட்சம்
20.2.2013 அன்று சென்னை கடற்கரை சாலையிலுள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் ஆலமரக்கன்றினை நட்டு 65 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
66 லட்சம் மரங்கள்
இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு வனத்துறையின் சார்பில் 49 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்டத்திற்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 250 மரக்கன்றுகள் வீதம், மொத்தம் 66 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.
டிசம்பர் மாதத்திற்குள்
இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.
வறட்சியை தாங்கும் மரங்கள்
இத்திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வறட்சியை தாங்கக்கூடிய மரக்கன்றுகள் நடப்படும்.
இந்த திட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.