நெல்லை-தூத்துக்குடிக்கு மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் எப்போது?
நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் பெண்களுக்கு என்று ஓதுக்கப்பட்டு காலியாகியுள்ள நிலையில்அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபாவில் காலியாக உள்ள உறுப்பினர்களின் இடங்களுக்கு அதிமுக சார்பில் நெல்லை மேயர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட செயலாளர் முத்துகருப்பன், தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ் ஆகியோரை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதில் விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளதால் மேயர் விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இடைத்தேர்தல் எப்போது?
மேயரின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. மேயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அரசியல் சட்டப்படி புதிய மேயரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் நடத்தப்படும்.
எம்.எல்.ஏ., எம்பி பதவிகள் காலியானால் அப்பதவிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நிர்ணயம் கிடையாது. இருப்பினும் மாநில தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாகும் உள்ளாட்சி தேர்தல் பணியிடங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடைத்தேர்தல் நடத்தி நிரப்பி வருகிறது.
மாநில தேர்தல் ஆணையம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நகராட்சி தலைவராக இருந்த முத்துசெல்விஎம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் பதவிஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. எனவே அந்த பதவிக்கு எல்லாம் சேர்த்துவிரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும்
இதனிடையே தூத்துக்குடி மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என கமிஷனர் மதுமதி தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் மதுமதி கூறியதாவது, தூத்துக்குடி மேயர்சசிகலா புஷ்பா ராஜினமா செய்ததை தொடர்ந்து துணை மேயர் சேவியர் பொறுப்பு மேயர் பதவியில் நீடிப்பார். மேலும் அவர் பொறுப்பு மேயர் என்றே அழைக்கப்படுவார்.
பொறுப்பு மேயர்
மாநகராட்சியில் துணை மேயரும் இல்லாத நிலை இருந்தால் தான் மாவட்ட கலெக்டர் அந்த பொறுப்பை வகிப்பார். மேயரின் முக்கிய நடவடிக்கைகளான மாநகராட்சி கூட்டத்தை நடத்துதல், கூட்டத்தில் விவாதிக்கும் பொருட்களை தீர்மானித்தல், விவாதத்தின் மீது முடிவு எடுத்தல் ஆகிய பணிகளை பொறுப்பு மேயர் கவனிப்பார்.
காலவரை கிடையாது
மேயர் பதவியிடம் காலியாக இருப்பது குறித்து அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் எழுத்து பூர்வமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படும்.
அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தான் மேயர் தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்றுமுடிவு செய்யும். துணை மேயர் இவ்வளவு காலம் தான் பொறுப்பு மேயராக இருக்கவேண்டும் என்ற காலவரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.