ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியா?... டிசம்பர் 3ல் உயர்மட்டக்குழுவில் முடிவு!
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுவது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.
சென்னை : ஆர். கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மதிமுக உயர்மட்டக் குழு டிசம்பர் 3ல் கூடி முடிவு செய்யும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது : விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக உலகில் எந்த இயக்கத் தலைவரும் இல்லை. தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலமே பிரபாகரன் களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
90களுக்குப் பிறகான சட்டசபை இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா முக்கிய பங்காற்றுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுவது குறித்து உயர்மட்டக்குழுவில் முடிவு செய்யப்படும். இதற்காக டிசம்பர் 3ல் மதிமுக உயர்மடட்டக்குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவெடுக்கும் என்றார்.
கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் திமுகவின் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற போது அவர் மீண்டும் திமுகவுடன் இணையக் கூடும் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியா அல்லது ஏதேனும் கட்சிக்கு ஆதரவா என்பதை உயர்மட்டக்குழு இறுதி செய்யும் என்று தெரிகிறது.