மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு.. சென்னை ஹைகோர்ட் தடைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம்கோர்ட்
மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சென்னை; மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இதற்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரனிதா, கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது சலுகை மதிப்பெண் வழங்கப்படக் கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்விற்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராமப் புற மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் தரும் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதோடு, மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து உயர்நீதிமன்றங்கள் தேவையற்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.