தடை விதிச்சா ஏன் போறீங்க? ஐபிஎல் பார்க்காட்டி என்ன தலையா வெடிச்சிடும்? - ஜெயக்குமார் அதிரடி கேள்வி
ஐபிஎல் போட்டிகளை காணாவிட்டால் என்ன தலையா வெடித்துவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல்வேறு தடைகளை தமிழக கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணாவிட்டால் என்ன தலையா வெடித்து விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என்று அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
வீரர்களும், ரசிகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் யோசனை தெரிவித்தார். இந்நிலையில் தமிழக கிரிக்கெட் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாட்டர் பாட்டிலுக்கும் தடை
அந்த அறிக்கையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் செல்போன், பதாகைகள், பேனர்கள், கொடிகள், தண்ணீர் பாட்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரக் கூடாது. மைதானத்தில் எதையாவது தூக்கி அடித்தால் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது.
அமைச்சர் ஜெயக்குமார்
இதுகுறித்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இத்தனை தடை விதித்துள்ள நிலையில் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண நேரில் செல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். கிரிக்கெட் சங்கத்தின் தடை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்திய கிரிக்கெட் வாரியம்
அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது மாநில அரசு அல்ல, இந்திய கிரிக்கெட் வாரியம். ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றால் அது வெற்றியடைந்ததா என்பதை பார்வையாளர்கள்தான் தீர்மானிக்கின்றனர். நான் இளைஞர்களிடம் பல முறை கூறிவிட்டேன். காவிரி விவகாரம் நடைபெற்று வரும் சூழலில் அவர்கள் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வெளிப்படையாக எப்படி கூறுவது
இளைஞர்கள் கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதை புறக்கணித்தால் அதை விட நல்ல விஷயம் வேறு கிடையாது. இதைவிட எப்படி வெளிப்படையாக கூற முடியும். இவ்வளவு சொல்லியும் போட்டியை காண இவர்கள் சென்றால் நான் என்ன செய்ய முடியும்.
மண்டை வெடிச்சிடுமா
கிரிக்கெட் போட்டிகளை காண செல்லும் ரசிகர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை காண ஏன் செல்கிறீர்கள். அவ்வளவு அவசியமா என்ன. போட்டியை பார்க்கவில்லை என்றால் தலையா வெடிச்சிடும் என்றார் ஜெயக்குமார்.