வைகை அணை தண்ணீரை தெர்மாகோல் போட்டு மூடிய செல்லூர் ராஜூ... அடடே பிளான் அட்டர் பிளாப்!
வைகை அணைத் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் போட்டு மூடிய செல்லூர் ராஜூவின் அடடே பிளான் அட்டர் பிளாப் ஆனது.
சென்னை: வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீட்டிய புது திட்டம் பணால் ஆகியுள்ளது. அணைகளில் உள்ள தண்ணீர் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கவே அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.
தெர்மாகோல் லேசாக காற்றடித்தாலே பறந்து ஓடி விடும். தண்ணீரில் மிதக்க விட்டால் விரைவில் கரை ஒதுங்கிவிடும். இது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எப்படி தெரியாமல் போனது? அவ்வளவு பெரிய வைகை அணை தண்ணீரை தெர்மாகோல் போட்டு மூட வேண்டும் என்று யோசனை சொன்னது யார் என்று சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த அணையின் தண்ணீர் மதுரை, தேனி மாவட்டங்களின் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பயன்
படுகிறது. பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 23.10 அடி மட்டுமே உள்ளது. மதுரையின் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 114 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது.
தண்ணீரை சேமிக்க திட்டம்
கோடையின் தாக்கம் அதிகரிப்பதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் மக்கள் தண்ணீருக்கு திண்டாடுகின்றனர். தற்போதைய நிலையில் 30 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அதிகாரிகள் ஆளாளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்
செல்லூர் ராஜூ
இந்தநிலையில் நேற்று செய்தியாளர்கள் சகிதமாக வைகை அணை பகுதிக்கு சென்ற செல்லூர் ராஜூ, தண்ணீர் ஆவியாவதை தடுப்பது குறித்த புதிய திட்டம் பற்றி விவரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வேட்டியை மடிச்சு கட்டு
வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தண்ணீர் மீது தெர்மாகோல் அட்டைகளை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார். பலரும் தெர்மாகோல் அட்டைகளை வைத்து தண்ணீர் மீது மூடினர். இதை படமெடுத்த ஊடகத்தினர் அடுத்து செல்லூர் ராஜூ பேசப்போவதை ஆவலுடன் காத்திருந்தனர்.
தெர்மாகோல் அட்டைகள்
பேசத் தொடங்கிய செல்லூர் ராஜூ, அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடுவதன் மூலம் நீர் ஆவியாமல் தடுக்கப்படும். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது என்றார்.
மீண்டும் முயற்சி
அணைத்தண்ணீர்ல் போடப்பட்ட அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கியது. இதை பார்த்த பலருக்கும் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு, அத்தனை அட்டைகளும் கரை ஒதுக்கி விட்டனவே என்றனர். அதற்கு அமைச்சர் இப்போது தண்ணீர் தேவை உள்ளது. மழை பெய்யாவிட்டால் சமாளிக்க முடியாது. அதனால் அணையில் ஆவியாகும் நீரை தடுக்க வேண்டும். அட்டைகளை மரச்சட்டத்தில் இணைந்து மிதக்க விடுவோம் என்றார் அமைச்சர்.
அறிவியல் ஆசிரியர்
பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சில சோதனை முயற்சிகளை செய்வார்கள் அதுபோல அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் வைத்து வைகை அணை தண்ணீரை மூடியது பலருக்கும் பள்ளி காலத்தை நினைவூட்டியிருக்கும் போல, போனதற்கு வீடியோவில் பதிவு செய்து கொண்டு வந்தனர்.
வயிற்று வலி வரும்
இந்த தெர்மாகோல் அட்டைகள் தண்ணீரில் ஊறிப் போய் உதிர்ந்து கலந்து விடும் குடிநீரோடு கலந்து விடும் இந்த தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதோடு உணவு குழாய், இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
ஐடியா கொடுத்தது யார்?
தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் போட்டு மூடுவதற்கு பதிலாக மிகபெரிய கண்ணாடி குடியை போட்டு மூடலாமே, இதனால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும் என்று சில அறிவு ஜீவிகள் கூறியுள்ளனர். மக்கள் பணம் இன்னும் எப்படி எல்லாம் விரையமாகப் போகிறதோ?