வங்கக் கடல் கிடுகிடுக்க.. பச்சை சேலை பட படக்க.. வெள்ளை வேட்டி சலசலக்க.. அட பிரசாரம் நடக்குது பாஸ்!
சென்னை: தலைமைச் செயலகத்தை இழுத்து மூடி பூட்டி விடலாம்.. அப்படி ஒரு நிலை இப்போது.. அமைச்சர்கள் யாரையும் அங்கு பார்க்க முடிவதில்லை. அத்தனை பேரும் பக்கத்தில் உள்ள ஆர்.கே.நகருக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
போட்டிக்கு ஆளே இல்லாத நிலையிலும் கூட ஜே ஜே என ஆரவாரமாக பிரசாரம் செய்ய அதிமுகவால்தான் முடியும். எதிரில் நிற்பவர்கள் எல்லாம் படு சாதாரண வேட்பாளர்கள்தான். பிரசாரமே கூட செய்யாமல் இருந்தால் போதும். செலவையாவது மிச்சப்படுத்தலாம்.
இருந்தாலும் விடாமல் வழக்கம் போல தாம் தூம் பிரசாரத்தில் கலக்கி வருகிறது அதிமுக. எங்கு பார்த்தாலும் அதிமுக பிரசாரமாகவே உள்ளது.

ஒருத்தர் கூட மிஸ் ஆகாமல்
ஓ.பன்னீர் செல்வம் முதல் கடை நிலை விஜயபாஸ்கர் வரை அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தொகுதியைப் பிரித்துக் கொண்டு தத்தமது மாவட்ட ஆதரவாளர்களுடன் வலம் வந்து கொண்டுள்ளனர்.

கையில் இலை.. வாயில் புன்னகை
வியர்க்க விறுவிறுக்க கையில் இரட்டை இலை சின்னத்துடன், புன்னகை சிந்தும் முகத்துடன் வரும் அமைச்சர்களைப் பார்த்து தொகுதி மக்கள் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளனர்.

இத்தனை பேரா
மொத்த அமைச்சர்களையும் பார்ப்பதில் வியப்பு ஒருபக்கம் இருந்தாலும். தேர்தல் முடிந்த பிறகு இவர்களையெல்லாம் இவ்வளவு இலகுவாக பார்க்க முடியுமா என்ற ஆயாசமும் மக்கள் மனதில் அலை பாய்கிறது.

மகளிர் படை
பிரசாரத்தில் அமைச்சர்களுடன் மகளிர் படையும் ஜாம் ஜாமென்று கூடவே செல்கிறது. கொடி பிடித்தபடி பச்சை கலர் சேலை, அதிமுக பார்டர் போட்ட வெள்ளை சேலை என விதம் விதமாக கலக்குகின்றனர் அதிமுக மகளிர்.

தாடை பிடித்து .. கையைப் பிடித்து
அமைச்சர்கள் பரவாயில்லை, நன்றாகவே இறங்கிப் போய் ஓட்டு வேட்டையாடுகின்றனர். எதிரில் படுபவர்களை எல்லாம் தோழமையுடன் கையைப் பிடித்தும், தாடையைப் பிடித்தும் (கெஞ்சாத குறையாக) ஓட்டு வேட்டையாடுகின்றனர்.

வளர்மதியின் ஊர்வலம்
அமைச்சர் வளர்மதி ஒரு பெரும் படையையே ஊர்வலம் போல கூட்டிச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு தொகுதியை ஸ்தம்பிக்க வைத்தார். அத்தனை பேர் கையிலும் பச்சைக் கலர் இரட்டை இலை.

வழக்கம் போல குத்தாட்டம்
இந்த ஊர்வலத்திலும் வழக்கம் போல மகளிர் அணியினர் குத்தாட்டம் போடத் தவறவில்லை. இந்த குத்தாட்டம் பேரணிக்கு புத்துணர்வு சேர்க்கவும் தவறவில்லை.












Click it and Unblock the Notifications