ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பேசியது இதுதான்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறிவருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறிவருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்தது வரை நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. குணமடைந்துவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என கடந்த ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்டது.
நலமடைந்து ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என காத்துக்கொண்டிருந்தனர் அதிமுக தொண்டர்கள். ஆனால் ஜெயலலிதா திடீரென மரணமடைந்ததாக டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது தமிழக மக்களிடையேயும் மற்ற அரசியல் கட்சியினர் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து விலகி வந்த ஓபிஎஸும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிகளின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா மரண விவகாரத்தை மீண்டும் சூடேற்றியுள்ள அதிமுகவினரின் கருத்துக்கள் இதோ..
மதுரை பழங்காநத்தத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை என்றார்.
அப்போது பொய் சொன்னோம்
சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்க விடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம், அதற்கு, இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என பகீரங்கமாக மன்னிப்பு கேட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
கொல்லப்படுவதை கூறிவிடுவார்..
ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை. யாராவது சந்தித்தால் தான் கொல்லப்படுவதை ஜெயலலிதா கூறிவிடுவார் என்பதால் சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
அணு அளவும் சந்தேகமில்லை
ஆனால் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஓஎஸ் மணியனோ ஜெயலலிதா மரணத்தில் தனக்கு அணு அளவும் சந்தேகம் இல்லை என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் மீதும் சந்தேகம் இல்லை என்ற அவர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
விசாரணை ஆணையத்தில் தெரியவரும்
ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று கூறிய அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிப்பார்கள் என்றார்கள். இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தப்பு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள்
தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை கமிஷனில் தண்டனை பெறுவார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார். இதில் ஒளிவு மறைவு கிடையாது என்றும் கூறினார்.
ஜெயலலிதாவை பார்த்தோம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம் என கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்த்ததாக கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.