மாயமான விமானத்தை தொடர்ந்து தேடுங்கள்..கணவர் திரும்ப வருவார்- நம்பிக்கையில் விமானியின் மனைவி அம்ருதா!
சென்னை: மாயமான டார்னியர் விமானத்தை சர்வதேச உதவியை நாடி, தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும். எனது கணவர் உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும் என துணை விமானி எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். கணவர் உயிருடன் இருப்பார் அவர் திரும்ப வருவார் என்றும் அவர் கூறியுள்ளார். இதே நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அதே விமானத்தில் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த விமானி சுரேசின் மனைவி தீபலட்சுமி
கடந்த 8ம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து, ரோந்து சென்ற கடலோர காவல்படைக்குச் சொந்தமான டார்னியர் சி.ஜி. 791 விமானம், திடீரென மாயமானது. அதில் பயணித்த கடலோரக் காவல் படை விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, துணை கமாண்டன்ட் சுபாஷ் சுரேஷ் ஆகியோர் விமானத்துடன் மாயமாகினர்.
விமானத்தைத் தேடும் பணி 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை விமானி எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா, போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
கணவரைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்ற சோகம் இருந்தாலும் கண்களில் ஒரு காத்திருப்பும், கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையும் தெரிந்தது. அதே நம்பிக்கையுடனே பேசினார். போபாலில் வசித்து வந்த நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முகலிவாக்கம், ஏ.வி.கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். விமானத்தைத் தேடும் பணியில் எந்தக் குறையும் இல்லை திருப்திகரமாக உள்ளது.
சர்வதேச உதவியுடன்
நீர்முழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், நம்மிடம் 400 அடி ஆழம் வரை சென்று தேடும் வசதி கொண்ட உபகரணங்கள் மட்டுமே உள்ளன. அதைவிட 800 அடி, 1000 அடி ஆழம் வரை சென்று தேடும் வசதி கொண்ட நவீன உபகரணங்கள் இல்லை. அதனால், சர்வதேச உதவியை நாடி தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். அவருடன் சென்ற மற்ற பைலட்களும் விமானத்தோடு மாயமாகியுள்ளனர்.
வனத்தில் விழுந்திருக்கலாம்
விமானம் கடலில் விழுந்ததாக கூறுகின்றனர். ஆனால், கடலில் இதுவரை விமான உதிரிபாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அடர்ந்த வனப்பகுதியிலும் விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ளது.
அதனால், வனப்பகுதியிலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
நீச்சல் தெரியும்
என் கணவருக்கு நீச்சல் தெரியும். விமானம் கடலில் விழுந்திருந்தால், நீச்சல் அடித்து, எப்படியாவது தப்பியிருப்பார். என் கணவர் உட்பட, மூன்று பேரும் பாதுகாப்புடன் பத்திரமாக மீண்டு வருவார்கள்.இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால், மூவரும் பத்திரமாக இருக்கின்றனர் என நம்புகிறோம்.
நிச்சயம் திரும்பி வருவார்
இதனிடையே மற்றொரு விமானியின் மனைவி தீபலட்சுமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என் கணவர் வீட்டிற்கு திரும்பிவிடுவதாக கூறி சென்றவர் இன்னும் திரும்பவில்லை. கடந்த 8 நாட்களுக்கு மேல் மிகவும் துயரத்துடன் இருக்கிறோம். என்னுடைய தெய்வபக்தி ஒரு போதும் வீண் போகாது. எனது கணவர் நிச்சயமாக திரும்பி வருவார் என்ற எனக்கு நம்பிக்கை உள்ளது.
நண்பர்களின் ஆறுதல்
எங்களுடைய மகன் இஷான் விமானி ஆக வேண்டும் என்பது தான் சுபாஷின் கனவு. அது நிச்சயம் நடக்கும். தேடுதல் பணி குறித்த தகவல் எங்களுக்கு வராத சமயத்தில், சுபாஷின் நண்பர்கள் எங்களை நேரில் சந்தித்து மிகவும் ஆறுதல் கூறி தார்மீக ஆதரவு தருகிறார்கள்.
தீவிரமாக தேடுங்கள்
அரசு எங்களுடன் ஒருங்கிணைந்து தகவல் அளிக்கிறார்கள். ஊடகத்துறையினரும் எங்களுடைய வாழ்க்கை கதையை மறந்துவிடக்கூடாது. தேடுதல் பணி குறித்து தொடர்ந்து ஒளிப்பரப்புங்கள். அப்போது தான் தேடும் பணி தீவிரமாக நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.