கருணாநிதியை சந்தித்த மு.க. அழகிரி... பேரன்களுடன் செல்ஃபி எடுத்த தாத்தா
திமுக தலைவர் கருணாநிதியை தனது மகன் தயாநிதியுடன் சென்று சந்தித்து பேசினார் மு.க. அழகிரி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது மகன் மு.க.அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மகனைப் பார்த்து உற்சாகமாக சிரித்தார் கருணாநிதி.
நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

கோபாலபுரத்தில் அழகிரி
இந்த திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது மனைவி, மகன், மருமகளுடன் வந்திருந்தார். மணமகனை உற்சாகப்படுத்தி சிரித்தார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மு.க.அழகிரியுடன் அவரது மகன் தயாநிதி அழகிரியும் கருணாநிதியை சந்தித்து கையை பிடித்துக்கொண்டு பேசினார்.

தந்தையிடம் ஆசி பெற்ற அழகிரி
தனது மனைவி காந்தி, மகன் தயாநிதி, மருமகளுடன் தந்தையை சந்தித்து ஆசி பெற்றார் அழகிரி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மூத்த மகன் குடும்பத்தினரை பார்த்த கருணாநிதி, உற்சாகமடைந்தார்.

பேரன்களின் செல்ஃபிக்கு உற்சாக போஸ்
பேரன்கள் தயாநிதி, அருள்நிதி ஆகியோர் தாத்தா கருணாநிதியை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது உற்சாகமாக போஸ் கொடுத்தார் தாத்தா கருணாநிதி.

கோபலாபுரம் வருகை
சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கியே இருக்கிறார் அழகிரி. அவ்வப்போது தந்தையை சந்திக்க
கோபாலபுரம் வந்து செல்வதோடு சரி. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் சற்று தேறி வரும் நிலையில் தந்தையை சந்தித்து பேசியுள்ளார் மு.க.அழகிரி. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் சென்றதால் இந்த திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications