தயாளு அம்மாளை அடுத்து தங்கை கனிமொழியை சந்தித்து பேசிய அழகிரி
சென்னை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு சென்னை வந்துள்ள மு.க. அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார்.
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு மு.க. அழகிரி நேற்று சென்னை வந்தார். திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்ற பிறகு நேற்று மாலை கோபாலபுரம் சென்று தனது தாய் தயாளு அம்மாவை சந்தித்து பேசினார் அழகிரி. சுமார் அரை மணிநேரம் தாயுடன் இருந்துவிட்டு அவர் சென்றார்.

இந்நிலையில் அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார் அழகிரி. சுமார் 40 நிமிடங்கள் கனிமொழியுடன் பேசிவிட்டு அழகிரி கிளம்பிச் சென்றார். அவர் சென்றதும் கனிமொழி தனது தந்தைக்கு செல்போன் மூலம் சந்திப்பு குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2ஜி வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் இருந்தபோது அவரை அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறினார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் ஆதரவாளர்களுக்கே அதிக அளவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள கனிமொழியை அழகிரி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications