மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவோம்: கோவை இந்திரா நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்
மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை: மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவோம்; தமிழகத்தில் அதிமுகவின் ஊழல் ஆட்சியை அகற்றுவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின், திருநாவுக்கரசர், தா. பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
என்னுடைய மகன் ஸ்டாலினை இந்திரா காந்திதான் அரசியலுக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்த்தார் என கருணாநிதி செய்தியாளர்களிடத்தில் அடிக்கடி கூறுவார். இது எதனால் என்பது அனைவருக்கும் தெரியும்.
எமர்ஜென்சியில் கைது
நான் முழுமையாக அரசியலுக்கு வருவதற்கு காரணம், 1975-ம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் , 1976-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மிசா கைதிகளாக கைது செய்யப்பட்டு சிறை கொட்டகைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி அடைக்கப்பட்ட 500 பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
சிறைவாசம் உந்துசக்தி
ஓராண்டு காலம் சிறையில் இருந்து வந்த அனுபவத்தில், முழுவதுமாக அரசியலுக்கு வருவதற்கு அதுவொரு உந்து சக்தியாக இருந்தது. அதற்கு இந்திரா காந்தி காரணமாக இருந்திருக்கிறார். ஆகையால் அவருடைய நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிற நேரத்தில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
உரிமைகள் இழப்பு
நீட் தேர்வில் நமது உரிமையை இழந்தோம். படிப்படியாக நமது உரிமைகளை எல்லாம் இழந்து தவிக்கும் நிலையில் சிக்கியிருக்கிறோம். இதுபற்றி எல்லாம் மத்தியில் இருக்கும் ஆட்சியும் கவலைப்படவில்லை, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
நிதி கொடுத்த இந்திரா
இந்திரா பிரதமராக இருந்தபோது 1969-ம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது கருணாநிதி புள்ளி விவரங்களுடன், இந்திரா காந்தியிடம் நிவாரண நிதியாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டபோது, அடுத்த நாளே அந்த நிதியை அவர் உடனே வழங்கினார். ஆனால், இன்றைக்கு அப்படி நடக்கிறதா எனில் இல்லை.
நிதி அளித்த கருணாநிதி
1972-ல் முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தியை சென்னைக்கு வரவழைத்து, தீவுத்திடலில் விழா நடத்தி, 'இந்திரா காந்தி கேட்ட பாதுகாப்பு நிதியில், எங்கள் மாநிலத்தின் சார்பில் ரூ. 6 கோடி வழங்குகிறோம்' என்று சொல்லி நிதியை ஒப்படைத்தார். அன்றைக்கு தமிழக ஆளுநராக இருந்த கே.கே.ஷா தலைமையில்தான் அந்த விழா நடைபெற்றது. கருணாநிதி வழங்கிய நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய இந்திரா காந்தி, 'நான் இந்த பாதுகாப்பு நிதிக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தேன், எங்களுடைய ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட 5 கோடி ரூபாய் தான் கொடுத்தார்கள், ஆனால், கருணாநிதி முதல்வராக இருக்கும், திமுக ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் ரூ.6 கோடி கொடுத்திருக்கிறீர்கள்' என்று நன்றி தெரிவித்து, அந்த நிதியைப் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் கருணாநிதி, 'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற பிரகடனத்தை வெளியிட்டார்.
அதிமுக அரசை அகற்றுவோம்
மாநில உரிமைகளை எல்லாம் நாம் எந்தளவுக்கு பெற்றோம், ஆனால் இன்றைக்கு அவற்றையெல்லாம் எப்படி படிப்படியாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம், என்பதையெல்லாம் நீங்கள் உணர வேண்டும். இந்த நிலையிலிருந்து நம்மை காப்பாற்ற, இனத்தைக் காப்பாற்ற, நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், அதேபோல தமிழ்நாட்டில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியெடுக்கும் நிகழ்ச்சியாக இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவைப் பயன்படுத்துவோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.