விவசாயிகள் பிரச்சினை... முதல்வரைச் சந்திக்கிறார் முக ஸ்டாலின்.. நாளை மறியல் வாபஸ்!
சென்னை: விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேச எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை நடைபெறவிருந்த விவசாயிகள் மறியல் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சந்தித்துப் பேசினார்.
பின்னர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஜனவரி 5-இல் விவசாயிகள் மறியல் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.
ஆனால், இப்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேசியபோது, எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார். மேலும் விவசாயிகள் பிரச்னை குறித்து நாளை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேச முக ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் 5-இல் நடைபெற இருந்த மறியல் வாபஸ் பெறப்படுகிறது," என்றார்.