ரஜினிகாந்த்துக்கு திமுக ஆதரவா? ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அரசியல் நாகரிகத்திற்காக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கருணாநிதி ஆதரித்து இருக்கலாம். ரஜினியுடனான அரசியல் கூட்டணி பற்றி தேர்தலின் போதுதான் முடிவு செய்ய முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரஜினியுடனான அரசியல் கூட்டணி பற்றி தேர்தலின் போதுதான் முடிவு செய்ய முடியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து ஆசிபெற்றார். சந்திப்பின் போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடனிருந்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து
கோபாலபுரத்தில் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்தேன் என தெரிவித்தார். அவரிடம் அரசியல் பிரவேசம் பற்றி கூறி வாழ்த்து பெற்றேன் என்றும் கூறினார். ஆன்மீக அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
புதிய விசயமல்ல
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அரசியல் பண்பாட்டின் அடிப்படையால் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார் என்றார். திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார்.
ஸ்டாலின் கருத்து
புதிய கட்சி துவங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். திராவிட கலாசாரம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியும் வாழ்த்தினார். எனவே, அரசியல் பண்பாடு மற்றும் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் தலைவர் கருணாநிதி அவர்களும் அவரை இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம். அதையே நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன் என்றார் ஸ்டாலின்.
தேர்தல் கூட்டணி
ரஜினி ஏற்கனவே ஆன்மீக அரசியல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். ரஜினி ஆதரவு கேட்பாரா, வழங்கப்படுமா என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்படி அவர் கேட்பதானால், அதை ஏற்பதா இல்லையா என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் ஸ்டாலின் கூறினார்.
ரஜினியின் அரசியல்
தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் தெளிவாக சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டின் மண் திராவிட இயக்கத்தின் மண்.
அழிக்க நினைத்தவர்கள் கதி
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரால் பண்பட்டு இருக்கின்ற மண் இந்த மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ இதற்கு முன் முயற்சித்துப் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதி என்னவானது என்பது எல்லாம் நாட்டுக்கே நன்கு தெரியும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.