தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா?..நீதி கேட்கும் பேரணியில் ஸ்டாலின் பேச்சு
கடலூர் : 4 ஆண்டாக மக்களுக்கு எதுவும் செய்யாத அரசை தட்டிக்கேட்க வேண்டாமா? தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா? என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கேட்கும் உணர்வு மக்களுக்கு வந்தாக வேண்டும் என்றும் அவர் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
புதுச்சத்திரம் அண்ணா திடலில் நீதி கேட்கும் பேரணியை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடலூர் மண்ணின் பெருமைகளை பட்டியலிட்டு அவர் தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது..
இந்தக்ககூட்டம் வெற்றி பெற அயராது பாடுபட்ட, ஆரவாரத்தோடு, ஆர்வத்தோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள எம்.ஆர்.கே., பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இங்கு வந்துள்ள கூட்டத்தை கண்ட நான் பெருமை கொள்கிறேன். இந்த கடலூர் மாவட்டம் பெருமை கொண்டது. வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தந்தது இந்த பூமி. புரட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க.,வில் உங்களில் ஒருவனாக நான் மக்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்றைய தமிழகத்தில் வீடுகளை விற்க, நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை. என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன்.
விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.
4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
4 ஆண்டாக மக்களுக்கு எதுவும் செய்யாத அரசை தட்டிக்கேட்க வேண்டாமா? தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா? நீதிக்கேட்கும் உணர்வு மக்களுக்கு வந்தாக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தித் தந்தவர் கலைஞர். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர் கலைஞர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.