நெல்லை போலீஸ் கைது செய்ய வந்த நிலையில் கருணாஸுக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னை மருத்துவமனையில் அனுமதி
எம்எல்ஏ கருணாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: எம்எல்ஏ கருணாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியது உள்ளிட்ட 7 வழக்குகளில் எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது ஐபிஎல் ரசிகர்களை தாக்கியதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார்.
எழும்பூர் நீதிமன்றம்
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை திருவல்லிக்கேணி மற்றும் நுங்கம்பாக்கம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அவற்றில் தடையை மீறி ஐபிஎல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் அவருக்கு 7 நாள் காவல் விதித்தது எழும்பூர் நீதிமன்றம்.
கருணாஸ் விடுதலை
அதற்குள் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையானார் கருணாஸ்.
கருணாஸ் சர்ச்சை பேச்சு
சிறையில் இருந்து வெளி வந்த நாள் முதலே செய்தியாளர் சந்திப்பின் போது அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தார். மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர் விவகாரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
கருணாஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
கருணாஸ் மீது வழக்கு
இந்நிலையில் கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர்.
திடீர் நெஞ்சுவலி
பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் இல்லாததால் போலீஸார் ஏமாற்றமடைந்னர். இந்நிலையில் கருணாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில்
இதைத்தொடர்ந்து கருணாஸின் மருத்துவ சான்றுகளை அவரது வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். நேற்றிரவு முதலே கருணாஸ் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார் என்றும் இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கருணாஸின் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.