கூட்டணி அமைத்த கையோடு பருப்பு விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் குதித்த மக்கள் நலக் கூட்டணி!
தூத்துக்குடி: மக்கள் நலக் கூட்டு இயக்கம், கூட்டணியாக நேற்று மாறிய நிலையில் தூத்துக்குடியில் சூட்டோடு சூடாக ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். துவரம் பருப்பு விலை உயர்விற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து மக்கள் நலகூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சிகள் கூட்டாக ஒற்றிணைந்து மக்கள் நலகூட்டணியை உருவாக்கியுள்ளன. நேற்றுதான் இதை முறைப்படி அறிவித்தனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ஒரு கிலோ ரூ.72ல் இருந்த துவரம் பருப்பு தற்போது ரூ.250 ஆக விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் அன்றாடம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அனைத்து மக்களையும் பாதித்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல கூட்டணி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகிலுள்ள சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் தலைமை வகித்தார். சி.பி.எம்.மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன், வி.சி.கட்சி மாவட்ட செயலாளர்கள் இ.கதிரேசன்(வடக்கு), முரசு.தமிழப்பன்(தெற்கு), செ.செல்வகுமார்(மாநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுகவின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. முடிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications