காஞ்சிக்கு வந்த மோடியின் தம்பி... ஜெயேந்திரருடன் சந்திப்பு
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி, இன்று பிற்பகல் காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரையும் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சோமாபாய் தாமோதர தாஸ் மோடி, அமிர்தாபாய் தாமோதரதாஸ் மோடி, பிரகலாத்பாய் தாமோதர தாஸ் மோடி, பங்கஜ்பாய் தாமோதர தாஸ் மோடி என 4 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பிரகலாத்பாய் தாமோதர தாஸ் மோடி ஆன்மீக விஷயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மோடிக்கு ஆதரவாகவே செயல்பட்டவர், பின்னர் மோடியின் அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தினார்.
இன்று பிற்பகல் 2 .45 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார் பிரகலாத் மோடி. மடத்தில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டு கிளம்பினார். அரைமணி நேரம் சங்கரமடத்தில் இருந்த பிரகலாத்திடம் செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பினர் சங்கராச்சாரியார்களை சந்தித்ததில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உள்ளதா என்றும் கேட்டனர்.
அதற்கு அவர், நான் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. இது எனது தனிப்பட்ட ஆன்மீகப் பயணம். திருப்பதி சென்று விட்டு அங்கிருந்து தமிழகத்தில் பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வந்துள்ளேன். அந்த வகையில் காஞ்சி சங்கராச்சாரியார்களையும் பார்க்க வந்தேன். அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என்று கூறினார். அரசியல் குறித்து கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications