காவிரி குறித்துப் பேசக் கூட விரும்பவில்லையே நம்ம பிரதமர்!
Recommended Video
சென்னை: சென்னை அருகே திருவிடந்தையில் நேற்று நடந்த பாதுகாப்புத்துறை கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மறந்தும் கூட காவிரிப் பிரச்சினை குறித்து மூச்சு கூட விடவில்லை. காவிரி என்ற வார்த்தையே அவரது வாயிலிருந்து வரவில்லை.
பாதுகாப்புத்துறை குறித்த நிகழ்ச்சியில் எப்படி காவிரி குறித்துப் பேச முடியும் என்று சிலர் கேட்கக் கூடும். சோழர்கள் குறித்து பேசத் தெரிந்த பிரதமருக்கு சோழநாடு சோறுடைத்து என்ற பெருமைக்கு மூல காரணமான காவிரி குறித்து பேச முடியாமல் போனது ஏன்...?
பிரதமரின் பேச்சில் எந்த இடத்திலும் காவிரியைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை பிரதமர். கர்நாடகம் கண் முன்பு வந்து போயிருக்கும் போல. அதனால்தான் பேசாமல் விட்டாரோ என்னவோ தெரியவில்லை.
கறுப்பு தமிழகம்
தமிழகமே நேற்று கொந்தளித்துப் போயிருந்தது. எங்கு பார்த்தாலும் கறுப்புக் கொடி போராட்டம். விதம் விதமாக, நூதனமாக, அதிரடியாக போராட்டம் நடத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டனர் தமிழக மக்கள். ஆனால் மறுபக்கம் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு விழா நடந்தது. அதுதான் பாதுகாப்புத் துறை கண்காட்சி.
மிரள வைத்த தமிழகம்
மத்திய அரசு காவிரி விவகாரத்தில் காட்டும் பாரபட்சம், உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத தன்மை, காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் முரண்டு பிடிப்பது, கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தை தூக்கிப் போடடு மிதிப்பது போன்ற வேதனைகளால் மக்கள் நேற்று கொந்தளித்து விட்டனர். கடந்த சில நாட்களாகவே தமிழக மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை எட்டிக் கொண்டுள்ளது. நேற்று கருங்கடலாக மாறி தமிழகம் மத்திய அரசை மிரட்டி விட்டது.
வாய் திறக்காத பிரதமர்
இந்த நிலையில்தான் நேற்று இரு நிகழ்ச்சிகளில் பேசினார் பிரதமர். ஒன்று பாதுகாப்புத்துறை கண்காட்சி, இன்னொன்று புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி. இரு நிகழ்ச்சிகளிலும் ஒரு இடத்தில் கூட காவிரிப் பிரச்சினை குறித்து குறிப்பிடவில்லை பிரதமர். தமிழகமே கவலைப்படாதே. உன் கவலை எனக்குப் புரிகிறது என்று ஒப்புக்கு ஒரு ஆறுதல் வார்த்தையைக் கூட அவர் சொல்லவில்லை அல்லது சொல்ல விரும்பவில்லை.
சோழர்களும் காவிரியும்
பல்லவ பூமியான மாமல்லபுரம் அருகே நின்று அவர் சோழர்கள் குறித்துப் பேசினார். சோழர்களின் வீரம் குறித்துப் பேசினார். ஆனால் சோழர்கள் போற்றி வளர்த்த அந்த விவசாயம் அழிந்து போனது குறித்து அவர் கவலைப்படவில்லை. சோழர் பூமியை செழிக்க வைத்த காவிரி குறித்துப் பேசத் தோன்றாமல் போனது பெரும் நகை முரண் ஆகும்.
குறளை முழுமையாக படிங்க
அட திருக்குறள் குறித்துக் கூட பேசினார் பிரதமர். திருக்குறளை மேற்கோள் காட்சிப் பேசினார். ஆனால் மறந்தும் கூட அவர் காவிரி குறித்துப் பேசாததற்கு வேறு என்ன காரணம் இருந்து விட முடியும்... கர்நாடக சட்டசபைத் தேர்தல் என்ற ஒன்றைத் தவிர.