தமிழக பிரசாரத்தில் வேஷ்டியில் கலக்கப் போகும் நரேந்திர மோடி
சென்னை: தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நமது பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து பிரசாரம் செய்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட அகில இந்திய பாஜக தலைவர்கள் விரைவில் தமிழகம் வருகிறார்கள்.
ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோரை பிரசாரத்துக்கு அழைத்துள்ளனர். எந்தெந்த தேதியில் வருகிறார்கள் என்ற பயண திட்டம் விரைவில் வெளியாக உள்ளது.
எங்களுக்கு வாங்க...
பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கிறார். தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரிக்கு வரவேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல மதுரைக்கு வரவேண்டும் என்று வைகோ வேண்டுகோள் வைத்துள்ளாராம்.
கோவை, ராமநாதபுரம்
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி, கோவை, ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் குப்புராம், மோடியின் நெருங்கிய நண்பராம். சுனாமி தாக்குதலின் போது நாகப்பட்டினத்தில் குஜராத் அரசு மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளை குப்புராம்தான் மேற்கொண்டராம். எனவே அவரது தொகுதியில் மோடி நிச்சயம் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
பாரம்பரிய உடை
எனினும் மோடியின் சுற்றுப்பயண திட்டம் இன்னும் முடிவாக வில்லை. மோடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரசாரத்துக்கு செல்லும் போது அந்த மாநில சிறப்பு பெருமை மற்றும் பிரச்சினைகளை பேசி மக்களை கவர்ந்து வருகிறார். மேலும் அந்த அந்த மாநில அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் அவரது நடை, உடையும் அமைகிறது.
வேஷ்டியில் மோடி
அதே போல் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரும் போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வர வேண்டும் என்று அவரை சந்தித்த மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். அதைக்கேட்டதும் ‘அதற் கென்ன நிச்சயம் தமிழக கலாச்சார உடையில் வருகிறேன்' என்று தெரிவித்துள்ளாராம்.இதனால் தமிழக பா.ஜனதா வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் வானதி
இதனிடையே வானதிஸ்ரீனிவாசன் நாளை பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தேர்தல் பிரசாரம்
அதை தொடர்ந்து வருகிற 12-ந்தேதிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், காஞ்சீபுரம் ஆகிய தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.