சசிகலா புஷ்பா மீது ரூ. 20 லட்சம் பண மோசடி புகார்... இனிமே இப்படித்தான்!
நெல்லை: 20 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி.சசிகலாபுஷ்பா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையர் சிவஞானத்திடம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் கொடுத்துள்ளா். நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது.
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.
சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் .
2011ல் தொடங்கிய வளர்ச்சி
2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார்.
மேயர் டூ ராஜ்யசபா எம்.பி
மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2014 ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார்.
பதவி பறிப்பு
ஏறுமுகத்தில் இருந்த சசிகலா புஷ்பாவை மப்பு ஆடியோ சரித்து விட்டது. அந்த ஆடியோவில் இருந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் பெரும் தொழிலதிபராம். சசிகலா புஷ்பாவிடம் இருந்து கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் ராஜ்யசபா கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
மார்பிங் படம்
இந்த சூழ்நிலையில்தான் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது. இருவரையும் இணைத்து வெளியான புகைப்படங்களில் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் மார்பிங் செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
கட்சியை விட்டு நீக்கம்
அந்த சர்ச்சை ஓய்வதற்கு டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கப் போகும் போது நடந்த சம்பவங்களை ராஜ்யசபாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா. இப்போது கட்சியை விட்டே நீக்கப்பட்டுள்ளார் சசிகலா புஷ்பா.
மேயர் - கவுன்சிலர் சண்டை
சசிகலா புஷ்பா மீது உள்ள பல வழக்குகளை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மேயராக சசிகலா புஷ்பா இருந்த போது 37வது வார்டு அதிமுக கவுன்சிலர் வெள்ளைப்பாண்டி என்பருடன் குடிநீர் விற்பனை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூசித்தட்டப்படும் கொலை வழக்கு
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வெள்ளைப் பாண்டி கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். வெள்ளைப்பாண்டி கொலை வழக்கில் சசிகலா புஷ்பாவை தொடர்புபடுத்தி வெள்ளைப்பாண்டியின் மகள் புகார் அளித்தார். அப்போது கண்டு கொள்ளாமல் விடப்பட்ட அந்த புகார் மனு மீண்டும் தூசித்தட்டப்படும் என்று கூறப்படுகிறது.
ரூ. 20 லட்சம் மோசடி புகார்
சசிகலா புஷ்பா மீது திருநெல்வேலி காவல்துறை ஆணையரிடம் ராஜேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். பொதுப்பணித்துறையில் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் விடுவது தொடர்பான ஒப்பந்தம் பெற்றுத்தருவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ரூ. 20 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஒப்பந்தம் பெற்றுத்தராமல் சசிகலா புஷ்பா ஏமாற்றி விட்டதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மிரட்டுவதாக புகார்
பணத்தை திரும்ப கேட்டால் சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும் ஒருமையில் பேசி திட்டி அசிங்கப்படுத்துவதாகவும் ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பா மீது இதுநாள் வரை புகார் அளிக்காமல் இருந்தவர்கள் எல்லாம் இனி வரிசையாக புகார் அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.