ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள்: சந்தீப் சக்சேனா விளக்கம்
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு மட்டுமே நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். அந்த தொகுதியை தவிர்த்து சென்னையின் பிற பகுதிகளில் இலவச திட்டங்களை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று கூறியதாவது:
இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் சென்னை ஆர்.கே நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இலவச திட்டங்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியை தவிர்த்து சென்னையின் பிற பகுதிகளில் அரசின் இலவச திட்டங்களை வழங்கலாம்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவல் காரணமாக செல்லலாம். ஆனால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தை நடத்த தடையில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதிக்கான திட்டங்களை எதையும் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கக்கூடாது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இடைத்தேர்தலில் போட்டியிட்டால் ஜெயலலிதா வேட்பளராக ஆர்.கே. நகர் தொகுதிக்கு செல்லலாமே தவிர முதலமைச்சராக அங்கு செல்லக்கூடாது.
வேட்பு மனுத்தாக்கல் முடியும் வரை அந்த தொகுதியில் வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்க்கும் பணிக்கு தடையில்லை. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கண்காணிப்பு பணியை தொடங்கும்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.