ஒரே வருடத்தில் 766 விபத்துகள்... 73 கொலைகள் - இது வேலூர் புள்ளிவிவரம்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விபத்துகளில் 766 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 2014ம் ஆண்டில் 83 கொலை வழக்குகள் பதிவாகின. 2015 ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 73 ஆக குறைந்தது. 71 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வீடு, புகுந்து கொள்ளை, வழிப்பறி, ஆதாய கொலை, வீடு புகுந்து திருடுவது என்று 2014 ஆம் ஆண்டில் 1,114 வழக்குகள் பதிவாகின. இது 2015 ஆம் ஆண்டில் 1,050 ஆக குறைந்துள்ளது. இவற்றின் மூலம் ரூபாய் 6 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 272 அளவுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டது.
விசாரணையில் ரூபாய் 4 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 174 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. இது 60 சதவீதமாகும். கடந்த 2014 ஆம் ஆண்டில் 53 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் நடந்த 793 விபத்துகளில் 862 பேர் உயிரிழந்தனர். 2015 ஆம் ஆண்டில் விபத்துக்கள் 718 ஆக குறைந்ததுடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 766 ஆக குறைந்தது. 2014 ஆம் ஆண்டில் விபத்தில் 4,183 பேர் காயமடைந்தனர்.
2015ல் 3,846 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 103 பேர் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, "2015 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்ட போலீசார் கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டனர். இதன்மூலம் கொலை, கொள்ளை, மற்றும் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது" என்றார்.