குரூப் 4- தேர்வுகள்... மிக அதிக அளவில் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கும் விண்ணப்பதாரர்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை : வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிக்கான தேர்வினை தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் .
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையான தகுதியான பணியாளர்களை பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது.
இதுவரை தனித்தனியாக நடந்து வந்த வி.ஏ.ஓ மற்றும் பணியாளர் தேர்வுகள் இந்த ஆண்டு முதல் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. மொத்தம் 9351 காலி பணியிடங்களை நிரப்பும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இணையதள முடக்கம்
விண்ணப்பம் வெளியான நாளில் இருந்தே பலரும் விண்ணபித்து வந்தனர். விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஓகி புயல் பாதிப்பு, டி.என்.பி.எஸ்.சி இணையதள முடக்கம் ஆகியவற்றின் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 20ம் தேதியாக மாற்றி கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
11 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் , இதற்கான தேர்வுகள் 2018 பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. மொத்தமாக 20 லட்சத்து 83 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் பெண்கள், 9 லட்சத்து 49 ஆயிரம் ஆண்கள் மற்றும் 54 மூன்றாம் பாலித்தனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக பேர் எழுதும் தேர்வு
இதுவரை நடந்த தேர்வாணையத்தின் சார்பில் நடந்த போட்டித் தேர்வுகளிலேயே அதிக பேர் விண்ணப்பித்தது இந்த தேர்தலில் தான் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காலநீட்டிப்பு செய்யப்பட்ட மூன்று நாட்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளார்கள். தேர்விற்கான ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன.
அதிகரித்துள்ள போட்டி தேர்வு மோகம்
காலியாக உள்ள 9351 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 83 பேர் விண்ணபித்து இருப்பதால், தலா ஒரு பணியிடத்திற்கு 222 பேர் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணி மோகம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதால் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் கடினமாக தயாராக வேண்டிய சூழ்நிலைக்கு தேர்வு எழுதுவோர் ஆளாகி உள்ளனர்.