விநாயகர் சதுர்த்தி: சென்னையில் மட்டும் 3000 விநாயகர் சிலைகள்.. பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையின் 3000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்பட
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன.
களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் ஆர்வமாக நேற்று வாங்கி சென்றனர்.
கடந்த ஆண்டு சென்னையில் 2 ஆயிரத்து 697 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய போலீசார் அனுமதி வழங்கினர். இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கேட்டுள்ளனர்.
புதிய இடங்களில் சிலைகள்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் வைக்க அனுமதி வழங்கப்படும். அதுதவிர புதிய இடங்களிலும் சிலைகள் வைக்க அனுமதி வழங்குவோம்.
உஷார் நிலையில் போலீஸ்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாறுவேடத்தில் கண்காணிப்பு
வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பொதுவாக 10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது.
எங்கெங்கே கரைக்கலாம்?
வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் நீலாங் கரை பல்கலைநகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகப்பகுதி, திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதிகளில் கரைக்கப்பட உள்ளன.
31ம் தேதி ஊர்வலம்
விநாயகர் சிலை ஊர்வலம் 31ம் தேதி, செப்டம்பர் 3ம் தேதி அன்று சென்னையில் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். 31ம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த முடிவு செய்துள்ளன.
நீலாங்கரை கடல்பகுதியில் கரைப்பு
சென்னை புறநகர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் செப்டம்பர் 3-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீலாங்கரை பல்கலைநகர் கடல் பகுதியில் கரைக்கப்படுகிறது.