ஏ.டி.எம். மூடல்... சம்பளத்தை வங்கியில் எடுக்க முடியாமல் பரிதவிக்கும் தனியார் ஊழியர்கள் !
சம்பளத்தை வங்கிகளில் எடுக்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் சிரமப்பட்டனர்.
சென்னை: சென்னையில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் போதுமான புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வங்கிகளுக்கு வராததால்,சில்லறை கிடைக்காமல் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன.இவற்றுக்கு சில்லறை தர வர்த்தகர்கள் மறுப்பதால்,2000 ரூபாய் நோட்டை பயன்படுத்த மக்கள் யாரும் தயாராக இல்லை.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய தொகையான ரூ.1,300 கோடியை தமிழக அரசு வங்கியில் நேற்று டெபாசிட் செய்தது. இந்த பணத்தை எடுக்க நேற்று காலை 10 மணிக்கே வங்கிகளை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓய்வூதியதாரர்களும் இன்று வங்கிக்கு வந்து நீண்டநேரம் காத்து நின்று பணத்தை எடுத்து சென்றனர்.
அதேபோன்று இன்று 1ந் தேதி என்பதால் ஐ.டி நிறுவனங்கள் போன்ற தனியார் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. அந்த பணத்தை எடுக்க தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் தனியார் ஊழியர்கள் திரண்டனர். இதனால், அனைத்து வங்கிகளிலும் இன்று காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், அவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே வங்கிகளில் பணம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications