நெல்லை: மனோன்மணியம் பல்கலை தேர்வில் 75% மாணவர்கள் தோல்வி
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் இலக்கியம் இறுதியாண்டு படித்த மாணவர்களில் 75 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறாததால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது வரை இவ்வளவு பேர் தோல்வி அடைந்தது என்று கூறப்படுகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கட்டிபாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஆங்கிலஇலக்கியம் படித்து 2013-2014ம் கல்வி ஆண்டில் ஆறாவது செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களில் குறிப்பிட்ட இரண்டு பாடங்களில் மட்டும் அதிகம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
குறிப்பாக லிட்ரரி கிருட்டிசம் என்ற பாடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர்கள் அதிகம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். சில கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்களே இந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 90 சதவீத்தினர் இந்த பாடத்தில் தோல்வியை தழுவியுள்ளனர்.
அகமதிப்பீட்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் குறிப்பிடும் படியாக மதிப்பெண் பெறவில்லை. இதுவரை 5 செமஸ்டர்களிலும் முதல்நிலை ரேங்க் என்ற அடிப்படையில் மதிப்பெண் எடுத்தவர்களும் குறிப்பிட்ட இந்த பாடத்தில் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் முதல் நிலையில் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையில் மற்ற படிப்புகளில் சேர விண்ணப்பம் வாங்கிய மாணவர்கள் பலரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் திகைத்து போய் உள்ளனர். இதில் ஏழை மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது. எப்படி தோற்றோம் என அவர்கள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான கல்லூரிகளில் ஓரே பாடத்தில் அதிகம் பேர் தோல்வி அடைவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் குமரகுருவிடம் கேட்டபோது குறிப்பிட்ட ஆங்கில இலக்கிய பாடத்தில் அதிகம் பேர் தேர்ச்சி அடையவில்லை. இதுவரை எங்களுக்கு எழுத்து பூர்வமாக புகார் வரவில்லை. ஆயினும் இதுகுறித்து முழுமையாக ஆராயப்படும். நியாயமான காரணங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications