தமிழக - கேரள எல்லையில் தொடரும் விபத்துக்கள்: அதிகாரிகள் வாகனச் சோதனை
தென்காசி: தமிழக - கேரள எல்லையில் தொடரும் விபத்துக்களை தடுப்பதற்காக புளியரை சோதனைச் சாவடி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக தினமும் கேரளா மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிமிண்ட், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. மலைப் பகுதியான இந்த சாலையின் வழியாக செல்லும் வாகனங்கள் அதிகளவு பாரம் ஏற்றி செல்வதால் இந்த தடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும் கடந்த சில தினங்களாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் அதிகாலை சிமிண்ட் ஏற்றி சென்ற லாரி ஒன்று புளியரை பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பாகுதி மக்கள் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று தென்காசி மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி முன்பு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக பாரங்கள் ஏற்றி வந்த ஒரு லாரிக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், போதிய சான்றுகள் இல்லாத 11 வாகனங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.