பாஜகவுடன் கூட்டணி வைக்க ஸ்டாலினை வம்புக்கு இழுப்பதா?? அன்புமணி ராமதாஸை பிராண்டிய பன்னீர்செல்வம்!
பாஜவுடன் கூட்டணி வைக்க ஸ்டாலினை வம்புக்கு இழுப்பதா என அன்புமணி ராமதாஸுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜவுடன் கூட்டணி வைக்க ஸ்டாலினை வம்புக்கு இழுப்பதா என அன்புமணி ராமதாஸ்க்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருப்பது தன்னை தர்மபுரியில் ஜெயிக்க வைத்த கூட்டணி அது என்ற பழைய ஞாபகமா அல்லது புதுக் கூட்டணிக்கு அச்சாரமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைமையில் கடந்த 25ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனை அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களை ஒப்புக்கொள்ளா விட்டால் பொது அரங்கில் விவாதிக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு பொழுது போகவில்லை என்றாலோ அல்லது தன் செய்தி பத்திரிக்கைகளில் பிரபலமாக வெளிவர வேண்டும் என்றால் ஸ்டாலின் மீது அறிக்கைவிட புறப்பட்டு விடுவார். ஆனால் இந்த முறை எங்கிருந்தோ வந்த "மிரட்டலுக்கு" பயந்து, "விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. என்றும், அது பற்றி பொது அரங்கில் நான் விவாதிக்கத் தயார்" என்று எஸ்டாலின் மீது பாய்ந்திருக்கிறார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனக்கு விவசாயிகளைப் பற்றியோ, காவிரி பிரச்சினை பற்றியோ, 1967 முதல் உள்ள தி.மு.க.வின் ஆட்சி பற்றியோ எதுவும் தெரியாது என்ற ஒரே தைரியத்தில் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார் என்பதைப் பார்க்கும் போது யாருடைய மிரட்டலுக்கோ பயந்து எங்கள் ஸ்டாலினை வம்புக்கு இழுத்து விமர்சிக்க முயன்று உள்ளார். ஆனால் அந்த முயற்சியில் தோற்றிருக்கிறார் என்பதுதான் அறிக்கையில் தெரிகிறது.
உள்ளபடியே வருத்தப்பட்டேன்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது, உழவர் சந்தைகள் அமைத்தது, விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டால் பல பக்கங்கள் பிடிக்கும். அதனால் மேற்கண்ட சிலவற்றை மட்டும் கோடிட்டு காட்டியுள்ளேன். பா.ம.க. அறிக்கையைப் பார்த்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அளிக்கப்பட்ட நலத்திட்டங்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த விவசாயிகள் அடைந்த கடன் தள்ளுபடியும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நிம்மதிகூட குறைந்த பட்சம் ஏ.சி. ரூம் அரசியல் செய்து கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று உள்ளபடியே வருத்தப்பட்டேன்.
என்னை மெயிர்சிலிர்க்க வைக்கிறது
இன்றைக்கு மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, விவசாயக் கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. அந்த விவசாயிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்துக் கட்சிகளும், அனைத்து தரப்பு மக்களும் இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தி, அது மகத்தான வெற்றி பெற்று விட்டது. அதை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எரிச்சலடைந்து இப்படியொரு தாக்குதலை ஸ்டாலின் மீதும், தி.மு.க மீதும் தொடுத்து இருக்கிறார். அவர் "நாடகம்" என்று கூறியிருக்கும் அதே வார்த்தையை பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களும் பயன்படுத்தி இருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் டெல்லியில் நடக்கும் ஊழல் வழக்கு மிரட்டலில் அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை இப்படி பொது அரங்கிற்கு விவாதத்திற்கு அழைக்கிறார். தி.மு.க.வை விமர்சிப்பதில் பா.ம.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் உள்ள இந்த ஒற்றுமை என்னை மெயிர்சிலிர்க்க வைக்கிறது.
யாருடைய நிர்பந்தத்ததிற்காக?
அன்புமணி அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.ஸ்டாலின் தினமும் பொது அரங்கில் நின்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார். பொது மக்களின் பிரச்சினைகள் பற்றித்தான் பேசி வருகிறார்.ஸ்டாலின் எந்த நேரத்திலும் விவாதத்திற்கு பயப்படுபவர் அல்ல. அன்புமணியே பார்த்து பயந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களையே "தி.மு.க.வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று சிங்கம் போல் கர்ஜித்தவர் ஸ்டாலின் என்பதை அன்புமணி ராமதாஸ் உணர வேண்டும். அது மட்டுமல்ல- யாருடனும் விவாதித்து வெற்றி பெறும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதையும் அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் விவாதிக்க முதலில் உங்களுக்கு காவிரி வரலாறு தெரியுமா? யாரோ ஒருவர் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வெளியிட்டு விட்டால் நீங்கள் அறிவுசார்ந்த விவாதங்களை எடுத்து வைப்பவர் என்று ஆகிவிடுமா? காவிரி நடுவர் மன்றம் உருவாகவும், இடைக்கால தீர்ப்பு பெறவும், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கவும், காவிரி இறுதி தீர்ப்பு வரவும்- ஏன் அந்த தீர்ப்பு அரசிதழில் வெளியிடவும் பாடுபட்டவர் தலைவர் கருணாநிதி என்ற வரலாறாவது பா.ம.க. இளைஞரணித் தலைவருக்குத் தெரியுமா? அனைத்தையும் மறந்து விட்டு, அல்லது தெரிந்தும் உறங்குவது போல் நடிப்பது எதற்காக? யாருடைய நிர்பந்தத்ததிற்காக?
புதுக் கூட்டணிக்கு அச்சாரமா?
உச்சநீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இறுதி தீர்ப்பு தொடர்பாக வழக்கு தொடுத்ததால் தான் அந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதம் ஆனது என்பதும், மீண்டும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகுதான் காவிரி இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளிவந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கேள்வி எழுந்தது என்றும் இளைஞரணித் தலைவருக்கு தெரியாமல் போய் விட்டது. ஆனால் உச்சநீதிமன்றமே நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள் என்று உத்தரவிட்டும் அமைக்காத பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை அந்த அறிக்கையில் விமர்சிக்காமல் பயந்து ஒதுங்கியிருப்பது ஏன்? தி.மு.க இடம்பெற்ற பிரதமர் வி.பி. சிங் அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது, தி.மு.க. இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இறுதி தீர்ப்பை வெளியிட்டது, அதே அரசுதான் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது என்பதைக் கூட அன்புமணி வசதியாக மறந்து விட்டது ஏன்? இப்போது பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மூன்று வருடமாகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று ஏன் பா.ஜ.க.வின் மீது விமர்சனக் கணை தொடுக்கவில்லை. தன்னை தர்மபுரியில் ஜெயிக்க வைத்த கூட்டணி அது என்ற பழைய ஞாபகமா அல்லது புதுக் கூட்டணிக்கு அச்சாரமா?
பா.ஜ.க. மோகத்தில்..
மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதை ஸ்டாலின் என்றைக்கும் மறைத்ததில்லை. ஆனால் எங்கள் ஸ்டாலின் போட்ட அந்த கையெழுத்தின் விளைவாகவே பிறகு அத்திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. விவசாயிகளிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கருத்துக் கேட்புக்கு பிறகுதான் மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்து அதை ஒரு கட்டத்தில் மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. ஆகவே மீத்தேன் திட்டத்தை கைவிடுகிறோம் என்று முதலில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிவித்ததற்கே ஸ்டாலின் அவர்கள் அன்று போட்ட கையெழுத்துதான் என்பதெல்லாம் "பா.ஜ.க. மோகத்தில்" இருக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவருக்கு கண்ணை மறைக்கிறது. அப்படி கைவிட்ட திட்டத்தை மத்திய அரசு ஏன் மீண்டும் கொண்டு வருகிறது என்று தன் அறிக்கையில் மத்திய அரசை கண்டிக்கும் தைரியமும் அவருக்கு இல்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டு, எதுவும் தெரியாமல் பொது அரங்கில் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைப்பீர்கள் என்றால்- ஸாரி அப்படியொரு விளம்பரத்தை உங்களுக்குக் கொடுக்க எங்கள் செயல்தலைவர் தயாராக இல்லை.
விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்..
முதலில் காவிரி வரலாறு, விவசாயிகளுக்கு தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து எல்லாம் சட்டமன்றத்திற்கு உங்களால் போகமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சார்பாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளுக்காக, அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் செயல் தலைவர் ஸ்டாலினையும் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு அரசியலில் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முன் வாருங்கள். அனுபவங்களை பெறுங்கள். அதன் பிறகு தளபதியுடன் பொது விவாதம் செய்ய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனை தயவு செய்து ஒரு ஊழல் வழக்கிற்காக டெல்லியில் அடகு வைக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.