600க்கும் மேற்பட்ட வீரர்களை போர்முனைக்கு அனுப்பி வைத்திருக்கும் 'முகையூர்'
விழுப்புரம்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான தமிழக ராணுவ வீரர் அந்தோணி நிர்வமல் விஜியின் சொந்த ஊரான முகையூர், ராணுவ வீரர்கள் நிறைந்த ஊராக திகழ்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 111வது பீரங்கிப் படையணியில் பணியாற்றியவர் லான்ஸ் நாயக் அந்தோணி நிர்மல் விஜி. கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்தோணி நிர்மல் விஜி வீரமரணம் அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள முகையூர்தான் மரணித்த வீரர் அந்தோணி நிர்மல் விஜியின் சொந்த ஊர். இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 5 ஆயிரம். ஆனால் நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்ற இந்த ஊரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனராம்.
முகையூர் முழுவதுமே முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பதான். இரண்டாம் உலகப் போரில் ராணுவத்துக்காக போரிடத் தொடங்கியது முதல் இன்று வரை ராணுவ அர்ப்பணிப்பு இங்கு நீடித்தே வருகிறது.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பலர் இந்தியா- சீனா போர், இந்தியா - பாகிஸ்தான் போர் மற்றும் கார்கில் போர்களில் பங்கேற்றிருக்கின்றனர். முகையூரைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் கேப்டனாக, கட்டளை அதிகாரிகளாக உயர் பதவிகளிலும் இருந்து வருகின்றனர்.
தலைமுறை தலைமுறையாக நாட்டுக்காக வீரர்களை அனுப்பிக் கொண்டே இருப்பதுதான் எங்களது கடமைகளில் ஒன்று என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர் முகையூர்வாசிகள்..
பெருமைமிகு கிராமம்!!